Friday, June 24, 2011

புலவர் சா இராமாநுசம் எழுதிய கவிதை


முத்துகுமார் இறந்த போது மனம் வருந்தி எழுதிய கவிதை 
               ஓயாத அழுகுரலே  ஈழ  மண்ணில்-தினம்
                 ஒலிக்கின்ற நிலைகண்டு  அந்தோ  கண்ணில்
        காயாது  வந்ததன்று  கண்ணீர்  ஊற்றே-அதைக்
                 காணாமல் மறைத்ததந்தோ  தேர்தல் காற்றே
        சாயாத  மனத்திண்மை   கொண்டோர்  கூட-ஏனோ
                 சாயந்தார்கள்  பதவிக்கே  ஓட்டு  தேட
         வாயார  சொல்லுகின்ற கொடுமை  அன்றே-அது
                 வரலாற்றில்  என்றென்றும்   மறையா  ஒன்றே
 
         கொத்துமலர்  வீழ்வதுபோல்   வன்னிக  காட்டில்-ஈழ
               குடும்பங்கள்  வீழ்வதனை  கண்டு   ஏட்டில்
        முத்துகுமார்   முதலாக  பலரும்  இங்கே-தீ
                 மூட்டியவர்  உயிர்துறந்தும்  பலன்தான்  எங்கே
        செத்துவிழு   மவர்பிணத்தை  எடுத்துக்  காட்டி-ஓட்டு
                 சேகரிக்க  முயன்றாராம்  திட்டம்  தீட்டி
      எத்தர்களும்  ஐயகோ கொடுமை  அன்றோ-அது
                 எதிர்கால  வரலாற்றில்  மறையா   தன்றோ
  
         வீரத்தின்   விளைநிலமே  ஈழ  மண்ணே-மீண்டும்
                 வீறுகொண்டே  எழுவாய்நீ  அதிர  விண்ணே
        தீரத்தில்   மிக்கவராம்  ஈழ  மறவர்-எட்டு
                 திசையெங்கும்  உலகத்தில்  வலமே  வருவார்
        நேரத்தில்  அனைவருமே  ஒன்றாய்   கூடி-தாம்
                நினைத்தபடி   தனிஈழப்   பரணி  பாடி
கூறத்தான்  போகின்றார்   வாழ்க  என்றே-உள்ளம்
                   குமுறத்தான்  சிங்களவர்  வீழவார்  அன்றே
இரக்கமெனும்  குணமில்லார்   அரக்கர்   என்றே-கம்பர்
                 எழுதியநல்   பாட்டுக்கே  சான்றாய்   இன்றே
         அரக்கனவன்  இராசபக்சே  செய்யும்   ஆட்சி-உலகில்
                 அனைவருமே  அறிந்திட்ட  அவலக்   காட்சி
         உறக்கமின்றி  ஈழமக்கள்   உலகில்  எங்கும்-உள்ளம்
                   உருகியழ  வெள்ளமென  கண்ணீர்  பொங்கும்
        தருக்கரவர்  சிங்களரின்  ஆட்சி  அழியும்-உரிய
                   தருணம்வரும்  தனிஈழம்  மலர்ந்தே   தீரும்
அழித்திட்டோம   தமிழர்களை  என்றே  கூறி-சிங்களர்
                    ஆலவட்ட   மாடினாலும்  அதையும்   மீறி
           கழித்திட்ட  காலமெல்லாம்  துன்பப்   படவும்-சில
                    கயவர்களாம்   நம்மவர்கை   காட்டி  விடவும்   
           விழித்திட்டார்  உலகுள்ள  ஈழ  மறவர்-அதன்
               விளைவாக  அணிதிரள  விரைந்தே  வருவார்
             செழித்திட்ட  வளநாடாய்  ஈழம்  மாறும்-இரத்தம்
                        சிந்தாமல்  தனிஈழம்  மலர்ந்தே  தீரும்
                
                                                  

No comments:

Post a Comment